கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்தி, 2029ஆம் ஆண்டிற்குள் மெட்ரோ பஸ்களின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 104 புதிய மெட்ரோ பஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அவை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது சேவையில் உள்ள 10 பஸ்கள் மற்றும் ஜப்பானிடமிருந்து கிடைக்கப்பெற்ற 7 பஸ்களுடன் இணைந்து, மொத்தம் 121 பஸ்களைக் கொண்டு “Colombo Metro Urban Luxury” சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, இத்திட்டம் கொழும்பில் மட்டும் இல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதன் அடிப்படையில், கொழும்புக்கு வெளியே யாழ்ப்பாணம் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதல் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தி, வீதி நிர்மாணம் உள்ளிட்ட பணிகளை காலதாமதமின்றி நிறைவு செய்யுமாறும் அரச அதிகாரிகளிடம் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
