இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரின் அட்டவணையில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய அட்டவணையின்படி, இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் செப்டம்பர் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. மூன்று போட்டிகளும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், தொடரை ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வமாக நடத்துகிறது.
இந்த நிலையில், அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் (BCCI) கலந்துரையாடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மூன்று போட்டிகளில் முதலாவது அல்லது இரண்டாவது போட்டியை செப்டம்பர் 14ஆம் திகதிக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும், அட்டவணை மாற்றம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்தத் தொடரானது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வளர்ந்து வரும் இருதரப்பு கிரிக்கெட் உறவின் மற்றுமொரு முக்கிய கட்டமாக அமையும் என BCCI தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி கடைசியாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதற்கு முன்னதாக, 2024 ஜனவரியில் இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதியிருந்தன.
