இலங்கையின் 73 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்கொள்ளளவு 63 வீதம் வரை குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள 18 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு 25 வீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை முருத்தவெல நீர்த்தேக்கத்தின் நீர்கொள்ளளவு 2.4 வீதமாகவும், அனுராதபுரம் மானங்கட்டிய நீர்த்தேக்கத்தின் நீர்கொள்ளளவு 2.8 வீதமாகவும் குறைந்துள்ளது.
அதேவேளை, அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்கொள்ளளவு 18.8 வீதமாகவும், பதவிய நீர்த்தேக்கத்தின் நீர்கொள்ளளவு 23.6 வீதமாகவும் குறைந்துள்ளது.
மட்டக்களப்பு உன்னிச்சை நீர்த்தேக்கம் 12.7 வீதமாகவும், ஹம்பாந்தோட்டை வெஹெரகல 18.7 வீதமாகவும், திருகோணமலை மொரவெவ நீர்த்தேக்கம் 9.7 வீதமாகவும் நீர்கொள்ளளவைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் ஒன்பது பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்கொள்ளளவு 22.9 வீதமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு 25.8 வீதமாகவும் பதிவாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் ஐந்து பிரதான நீர்த்தேக்கங்களில் 28 வீத நீர்கொள்ளளவு காணப்படுகின்றது. அதிகபட்சமாக குருநாகல் மாவட்டத்தின் 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 76.6 வீத நீர்கொள்ளளவு சேமிக்கப்பட்டுள்ளது.
எனினும், குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பிரதான நீர்த்தேக்கங்களில் உள்ள நீர், அடுத்த மழை பெய்யும் வரை போதுமானதாக இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதுள்ள நீரை மிகவும் திறமையாக முகாமைத்துவம் செய்து பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
