கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையில் உயிரிழந்த ஹம்தியின் மருத்துவ அறிக்கை 3 வருடங்கள் கடந்தும் பெற்றோர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. அரசாங்கம் இதனை மறைப்பதன் நோக்கம் என்ன என கேட்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் சுகாதார அமைச்சரிடம் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியில்,
கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 2023 ஜூலை 27ஆம் திகதியன்று, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஹம்தி என்ற சிறுவன் சிறுநீராக சத்திரர சிகிச்சைக்கு உட்படு்த்தப்பட்டிருந்தார்.
அவரது ஒரு சிறுநீரகமே பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அதனை மாத்திரமே சத்திர சிகிச்சையில் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சத்திரசிகி்ச்சையின்போது சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறுவன் உயிரிழந்தான்.
அதேநேரம் இந்த சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள், அதற்கு உதவியாக இருந்தவர்கள் என சம்பந்தப்பட்ட அனைவரும் சிறுவனின் மரணத்துடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடு செய்து, தற்போது மூன்று வருடங்கள் கடந்துள்ளன. பாராளுமன்றத்தில் அமைச்சரிடம் இந்த கேள்வியை மூன்றாவது தடவையாகவே நான் கேட்கிறேன்.
சிறுவன் ஹம்தியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை இதற்கு முன்னர் 2024ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக இருந்த ரமேஷ் பத்திரணவிடமும் இந்த கேள்வியை கேட்டிருந்தேன். தற்போதைய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடவும் இந்த கேள்வியை ஒரு சில மாதங்களுக்கு முன்னர் கேட்டிருந்தேன். சுகாதார அமைச்சு, குறித்த சிறுவனின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த விசாரணை அறிக்கையை வழங்குவதில்லை.
சிறுவனின் பெற்றோர்கள் கடந்த 3 வருடங்களாக இந்த விசாரணை அறிக்கையை கேட்டு வருகிறார்கள். ஆனால் சுகாதார அமைச்சு இதனை மறைத்து வருகிறது. அதனால் இந்த விசாரணை அறிக்கையை எந்த காலப்பகுதியில் வழங்க முடியும் என்பதை தெரிவிக்க முடியுமா என கேட்கிறேன் என்றார்.
அதற்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜயமுனி குறிப்பிடுகையில், விசாரணை அறிக்கையை கேட்குமாறு சிறுவனின் பெற்றோர்களுக்கு சொல்லுங்கள். என்றாலும் இதுதொடர்பில் உறுதியாக எனக்கு தற்போதைக்கு ஒன்றும் தெரிவிக்க முடியாது. இது தொடர்பில், தேடிப்பார்த்து, உங்களுக்கு விளக்கமளிக்கிறேன் என்றார்.
