களனி கங்கையில் நீரைப் பெறும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் அடுத்த சில மணி நேரங்களுக்குள் வழமைக்குத் கொண்டுவரப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
முப்படைகளின் ஒத்துழைப்புடன் இந்த அவசர நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றி, நீர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் நீரின் தரம் குறித்து ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
நீர் உரிய தர அனுமதிக்குப் பொருந்துவது உறுதிசெய்யப்பட்ட பின்னரே விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுவதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கான நீர் விநியோகம் அடுத்த சில மணி நேரங்களுக்குள் முழுமையாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பத்தரமுல்லை, கோட்டே, நாவல மற்றும் நுகேகொட போன்ற பகுதிகளுக்கு நீர் விநியோகம் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்குச் சபையின் 24 மணி நேரக் கட்டணமில்லாத் தொலைபேசி இலக்கமான 1939ஐத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
