பாதாள உலகின் முக்கிய புள்ளி என அறியப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பூஸா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றத்தால் எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், வெலிசர சிறைச்சாலையில் சந்தேகநபரின் எதிர் தரப்பினர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், அவரை பாதுகாப்பு நிமித்தம் வெலிசர தவிர்ந்த வேறு எந்தவொரு சிறைச்சாலையிலாவது தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சட்டத்தரணி முன்வைத்த விடயத்தை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை மிகவும் பாதுகாப்பான பொருத்தமான சிறைச்சாலையொன்றில் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபரை பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசென்று தடுத்து வைப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
