அனுராதபுரம் – விமான நிலைய வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில், கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என்ற 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண் என தெரியவந்துள்ளது.
இவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி கவரக்குளம பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி, பெண்ணொருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த சிறிய லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கிராம உத்தியோகத்தரும், பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லொரியை செலுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் இன்று (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதன்போது அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பாக சிறிய ரக லொறியின் ஓட்டுநரான 27 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து கவரக்குளம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
