அரச கட்டுமானப் பொறியியல் சேவைகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் தொடர்பான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடக ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட பிரசாத் மஞ்சு என்பவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சகத்திற்கு சொந்தமான வாகனங்களை தனிப்பட்ட ஊடக நடவடிக்கைகளுக்காக முறையற்ற விதத்தில் பயன்படுத்தி அரசுக்கு கணிசமான நிதி பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி உதய குமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்ட அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், அவருக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனத்தையும் அதனுடன் தொடர்புடைய எரிபொருள் வசதிகளையும் அவர் பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.
மேலும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிகளுக்காக வாடகைக்கு பெறப்பட்டிருந்த பிற வாகனங்களும் அவரது ஊடகத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசாங்கத்திற்கு 17 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்கள் தொடர்பான சட்டங்களை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கொழும்பு 02 மலே வீதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
