மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள அரச தரப்பினரின் 19 ஆவது மாநாட்டில் (19th Conference of States Parties) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நாட்டின் முன்னணி உரிமை செயற்பாட்டாளரான நிலஷானி டி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இம்முறை மாநாட்டில் இலங்கையின் இளம் பிரதிநிதியாக பங்கேற்கும் அவர், ஜூன் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள தொடக்க அமர்வில் ஐநா பொதுச்செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் முன்னிலையில் சபையில் உரையாற்றுவதற்கும் அழைப்பு பெற்றுள்ளார்.
உலகளவில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக நடைபெறும் முக்கியமான சர்வதேச மன்றமாக கருதப்படும் இந்த அரச தரப்பினரின் மாநாட்டிற்கு, இவ்வருடம் இலங்கை தலைமை வகிப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
‘டவுன் சிண்ட்ரோம்’ (Down Syndrome) பாதிப்பைக் கொண்ட நிலஷானி டி சில்வா, மாற்றுத்திறனாளி சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளராகவும், திறமையான ஆலோசகராகவும், ஆசிரியராகவும் மற்றும் ஆடை வடிவமைப்பாளராகவும் பரவலாக அறியப்படுகிறார்.
சமூகத்தில் நிலவும் தவறான எண்ணங்களுக்கு எதிராக அவர் ஆற்றிய சேவையை மதிப்பளிக்கும் வகையில் இந்த சர்வதேச பிரதிநிதித்துவ வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
