மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவை தாக்க முயன்றதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த வாரம் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவை ஹிஸ்புல்லா அநாகரிகமான முறையில் அச்சுறுத்தி தாக்க முற்பட்டதாக தெரிவித்தார்.
தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே கடந்த காலங்களில் இன முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் இலாபம் தேடியவர் ஹிஸ்புல்லா என குற்றஞ்சாட்டிய அவர், தற்போது மீண்டும் மட்டக்களப்பில் இன நல்லுறவை பாதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட ஒருவர், சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனத் தெரிவித்த ராஜ்குமார், கந்தசாமி பிரபு தமிழர் என்பதாலேயே இத்தகைய இனவாத அணுகுமுறை வெளிப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்காக ஹிஸ்புல்லா உடனடியாக கந்தசாமி பிரபுவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், ஓட்டமாவடியில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காளி கோவிலை அகற்றி அந்த இடத்தில் மீன் சந்தை அமைத்ததாக ஹிஸ்புல்லா தேர்தல் மேடைகளில் பெருமையாக பேசியதாகவும், சட்டங்களை மதிக்காமல் செயல்பட்ட ஒருவர் இன்று சட்டம் குறித்து பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஹிஸ்புல்லாவுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும், குறிப்பாக சஹரானுடனும் தொடர்புகள் இருந்ததாக, கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் என்பதையும் நினைவூட்டினார்.
ரிதிதென்னை பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான பல ஏக்கர் காணிகள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இவ்வாறான காணி அபகரிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்துவதுடன், பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு உரிய நீதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்தார்.
