பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இந்தப் பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தாலும், இதுவரை விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், தன்னிச்சையான கைது நடவடிக்கைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தச் சட்டத்தில் வெறுமனே திருத்தங்கள் மேற்கொள்வதோ அல்லது வேறு பெயரில் புதிய சட்டமாக மாற்றுவதோ போதுமான தீர்வாக அமையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தையும் ஜனநாயக ஆட்சிமுறையையும் வலுப்படுத்தும் நோக்கில், PTA சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
