பல்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகக் கூறப்படும் பாரிய அந்நியச் செலாவணி மோசடி தொடர்பில், வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் நிதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, பல நிறுவனங்களையும் வங்கிக் கணக்குகளையும் பதிவு செய்து, போலியான இறக்குமதி நடவடிக்கைகளை காட்டி வெளிநாட்டு நாணயத்தை நாட்டிற்கு வெளியே அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில், சந்தேகநபர் கடந்த ஜூன் 19ஆம் திகதி நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நிதி தொகைகள் நிறுவனக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்ட பின்னர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், சுங்க வரி மற்றும் பிற வரிகளை தவிர்க்க போலியான இறக்குமதி பரிவர்த்தனைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டங்களை மீறி, அந்த நிதி வருவாய்கள் மூலம் சொத்துகள் மற்றும் காணிகள் உள்ளிட்ட உடைமைகள் வாங்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
2023 ஜனவரி 1 முதல் 2025 செப்டம்பர் 15 வரை, 89 உள்ளூர் நிறுவனங்கள் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி டெலிகிராபிக் பரிமாற்றங்கள் (TT) மூலம் பெருமளவிலான அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும், ஆனால் அவ்வாறு எந்த இறக்குமதியும் இடம்பெறவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களம் பொலிஸ் மா அதிபரிடம் அறிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
