களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய குறித்த அதிகாரி, வர்த்தகர் ஒருவரின் வாகனம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யாமல் இருப்பதற்காக, 10 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் முறைப்பாட்டாளரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் அவர், மீதமிருந்த 9 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொள்ள களுத்துறையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
