அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எரிபொருள் வழங்குவதில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், விசேட செலவின அலகுகள், ஆணைக்குழுக்களின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக, அரச செலவினங்களை முகாமை செய்யும் நோக்கில் இதற்கு முன்னர் வர்த்தமானி மூலம் இந்த எரிபொருள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், தற்போதைய புதிய சுற்றறிக்கையின் மூலம் அந்த பழைய சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு தற்போதைய எரிபொருள் விலைகளின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
