லெபனானில் அமுல்படுத்தப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்தத்திற்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி இன்று அறிவித்துள்ளார்.
இந்த 10 நாள் போர்நிறுத்தக் காலம் முழுவதும் வர்த்தகக் கப்பல்களுக்கான பாதை “முழுமையாகத் திறந்துவிடப்படும்” என அவர் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதை அவரும் தனது சமூக வலைதளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்குப் பிறகு, முதன்முறையாக ஈரானிய எண்ணெய் ஏற்றிய மூன்று பெரிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச சந்தையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பாதையின் திறப்பால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் இந்த அறிவிப்பைத் தங்களது எரிசக்தி பாதுகாப்பிற்கு மிக முக்கியமானதாகக் கருதுகின்றன.
