இலங்கையின் வரலாற்றில் மற்றுமொரு மிகக் கொடூரமான நாளாக நினைவுகூரப்படும் தினம் இன்றாகும்.
2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடையச் செய்தன.
இந்த தாக்குதல்கள் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களையும், ஐந்து நட்சத்திர விருந்தகங்களையும் குறிவைத்து நடத்தப்பட்டன.
இந்த நிலையில், அப்பாவி இறை விசுவாசிகளின் நீதிக்கான போராட்டம் 07 ஆண்டுகளாக தொடர்கிறது.
இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவுகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) காலை மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள சேமக்காலையில் நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை மனோருபன் விசேட பிரார்த்தனைகளை நடத்தியதைத் தொடர்ந்து புனித நீரும் தெளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, நினைவேந்தலில் கலந்துகொண்ட உறவுகளால் உயிர்நீத்த தமது உறவுகளின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பொது உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை வேறு விதத்தில் திசைதிருப்பியிருந்தார்கள். குற்றவாளிகளை மறைப்பதற்கான சூழ்ச்சிகளும் கூட நடந்துவருகின்றன. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூட விடுதலை செய்யப்படுகின்ற ஒரு நிலைமை காணப்பட்டது. ஆனால், இப்போது விசாரணைகளில் சற்று நம்பிக்கை பிறந்திருப்பதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
இந்த ஆட்சிக் காலத்தில் ஒரு வெளிச்சம் தெரிவது போன்று தெரிகின்றது. அதாவது இரண்டாம் மட்ட குற்றவாளிகள், மூன்றாம் மட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதாவது ஒரு தேவைக்காக, ஒரு ஆட்சி மாற்றத்துக்காக நடத்தப்பட்ட ஒரு குண்டுத் தாக்குதலாக இது கொள்ளப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
