சிலாபம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2,000 கிலோ கிராமிற்கும் அதிகமான பீடிஇலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 04 இந்தியப் பிரஜைகள் உட்பட 10 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி சிலாபம் கடற்பரப்பில் விசேட தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல் ஒன்று, இந்தியப் படகு ஒன்றிலிருந்து மூன்று உள்நாட்டு டிங்கி படகுகளுக்குச் சந்தேகத்திற்கிடமான பொதிகளை மாற்றிக்கொண்டிருந்ததைக் அவதானித்துள்ளது.
கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, 54 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்த 2,000 கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள கடத்தல் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இந்தியப் படகுடன் 04 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இதனைப் பொறுப்பேற்க வந்த 03 உள்நாட்டு டிங்கி படகுகளும் 06 இலங்கையர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய சந்தேகநபர்கள் 18 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், படகுகள் மற்றும் சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
