இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் திருமணத்திற்காகச் சென்றுகொண்டிருந்த 27 வயதுடைய மணமகன் ஒருவர், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (01) இரவு இடம்பெற்றுள்ளது.
கேட்சராய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிபிபூர் கிராமத்திற்கு அருகில் நேற்று இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. படோர் கிராமத்தைச் சேர்ந்த அசாத் பிண்ட் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அசாத் தனது திருமண ஊர்வலத்துடன் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இனந்தெரியாத நபர்கள் வாகனத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல்தாரிகள் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று மணமகனை இலக்கு வைத்துப் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மணமகனை உறவினர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாகத் தெரியவரவில்லை என்றாலும், மணமகளின் உறவினர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த உறவினர் இந்தத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகவும், ஊர்வலத்தின் இடைநடுவே மணமகனைத் தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளைக் கைது செய்யப் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
