வருடாந்த பஸ் கட்டண திருத்தக் கொள்கைக்கு அமைவாக, திருத்தப்பட்ட புதிய பஸ் கட்டணங்கள் நாளை புதன்கிழமை (01) முதல் அமலுக்கு வர வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவதாக சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வருடாந்த கட்டண திருத்தக் கொள்கையின் கீழ் மேற்கொள்ள வேண்டிய கட்டண மாற்றங்கள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வருடாந்த கட்டண திருத்தம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதுவரை தமக்கும் அல்லது பிற தனியார் பேருந்து சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து எந்தவித கலந்துரையாடலும் நடத்தவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திட்டமிட்டபடி பஸ் கட்டண திருத்தம் நாளை முதல் அமலுக்கு வராத பட்சத்தில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஊடகப் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் புதிய திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
