வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த மூன்று சிறைக்காவலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கைதி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய நிலையில், பொரளை பகுதியில் வைத்து அதிகாரிகளால் விரட்டிப் பிடிக்கப்பட்டார். இதன்போது கைதிக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார். 5,000 ரூபாய் அபராதத்தைச் செலுத்தத் தவறியதால், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
சிறை அதிகாரிகள் அவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொரளை பொலிஸாரின் இரண்டு விசேட விசாரணைக் குழுக்கள் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றன. ஏற்கனவே 10 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மெகசின் சிறைச்சாலையிலும் இதேபோன்றதொரு மரணம் பதிவாகியிருந்த நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
