கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் பயணித்து வந்த ‘சுப்பிரமணியன்’ என்ற நாயை கல்முனையில் எட்டி உதைத்து தாக்கிய நபர், கல்முனை பொலிஸாரால் நேற்று (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனைக்குடி பிரதான வீதியில் அஷ்ரப் வைத்தியசாலைக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பழக்கடை உரிமையாளர் ஒருவர், நாயை கொடூரமான முறையில் எட்டி உதைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் விலங்கு நேயர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த கல்முனை பொலிஸார், சந்தேகநபரை இனங்கண்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
