பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் மீதான தீர்மானம், எதிர்வரும் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (08) அறிவித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
யோஷித்த ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ், இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்த டெய்ஸி பொரஸ்ட் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால், தனது கட்சிக்காரருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இரண்டாவது பிரதிவாதியான டெய்ஸி பொரஸ்ட் அவரது உடல்நிலை காரணமாகவே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாரே தவிர, அது வழக்கின் தன்மையைப் பாதிக்காது எனத் தெரிவித்தார்.
எனவே, குறித்த வழக்கு சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக மீண்டும் திங்கட்கிழமை (11) அழைக்கப்படும். இது குறித்த பிரதிவாதி தரப்பின் நிலைப்பாட்டை செவ்வாய்க்கிழமை (12) முன்வைக்க வேண்டும். ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் குறித்த நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும்.
