திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிசுவொன்று உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் நிலவுவதாகத் தெரிவித்து, அதன் பெற்றோர் இன்று (13) திருகோணமலை துறைமுகக் காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தமது சிசுவின் மரணம் குறித்து வைத்தியசாலை நிர்வாகம் தெளிவற்ற மற்றும் முரண்பாடான தகவல்களை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிசு உயிரிழந்ததற்கான உண்மையான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட காரணம் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த மரணத்தில் வைத்தியசாலையின் அணுகுமுறை திருப்தியற்றதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள பெற்றோர், இதற்கான நீதியைப் பெற்றுக்கொள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்:
“எமது சிசுவின் மரணத்திற்கான உண்மையான காரணம் எமக்குத் தெரிய வேண்டும். இந்தச் சம்பவத்தில் பல சந்தேகங்கள் காணப்படுவதால், நாம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளோம். அத்துடன், வைத்தியசாலையின் பொறுப்பற்ற அணுகுமுறை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளோம்,” என்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுகக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியசாலை நிர்வாகத்திடம் இது குறித்த விளக்கத்தைப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
