மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்று, அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அந்த நாட்டில் இதுவரை குறைந்தது 131 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மருத்துவர் ஏன் அன்சியா பிபிசி ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தொற்று குறித்து விரிவான ஆய்வுகளை முன்னெடுக்கும்போது, இது ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 24ஆம் திகதி முதலாவது தொற்று கண்டறியப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே இப்பரவல் நீடித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தற்போது பரவி வரும் எபோலா வைரஸ், ‘புந்திபுகியோ’ (Bundibugyo strain) எனப்படும் அரிய வகை பிரிவைச் சேர்ந்ததாகும். இதற்கு இதுவரை முறையான தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை.
எனினும், ஏனைய மருந்துப் பொருட்கள் மூலம் இதற்குப் பாதுகாப்பு வழங்க முடியுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆராய்ந்து வருகிறது.
