ஹட்டன் – டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இன்று (21) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள வியாபார நிலையமொன்றில், தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினரின் மரணம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகளில் 82 வயது மதிக்கத்தக்க இருவர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதாகவும், அவர்களது பிள்ளைகள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் எடுத்த நிலையில் நீண்ட நேரம் குறித்த இருவரும் பதிலளிக்காத காரணத்தினால் , அயலவர்களை தமது வீட்டில் சென்று பார்க்கும்படி கோரியுள்ளனர். இதன் பின்னரே குறித்த தம்பதியினர் காயங்களுடன் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
எவ்வாறாயினும், இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
