நாட்டில் நிலவி வரும் பலத்த மழையுடனான மோசமான காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிவேக வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு அறிவிப்புப் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் வழிகாட்டல்களைக் கட்டாயம் பின்பற்றுமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விபத்துக்களைத் தவிர்க்கும் முகமாகப் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோமீட்டர் என்ற வரம்பிற்குள் பேண வேண்டும்.
பகல் நேரமாக இருந்தாலும் சரி, போதிய வெளிச்சமின்மை காரணமாக வாகனங்களின் முன் பக்க முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணிக்க வேண்டும்.
திடீர் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, தனக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்கும் தனது வாகனத்திற்கும் இடையில் போதியளவு பாதுகாப்பான தூர இடைவெளியைப் பேண வேண்டும்.
மழையினால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், ஒரே தடவையில் திடீரென பிரேக் மிதிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நழுவிச் சென்று பாரிய விபத்துக்கள் ஏற்படக்கூடும்.
எனவே, அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்துச் சாரதிகளும் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு, விழிப்புணர்வுடன் வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.
