நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக, களு கங்கையின் தாழ்நிலப்பகுதியில் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
களு கங்கையின் கிளையாறான குடா கங்கை, மில்லகந்த ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்கு நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புபுதுபாவில மற்றும் எல்லகாவ பகுதிகள் களு கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தைத் (Alert Level) தாண்டி, ஆபத்தான முறையில் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இரத்தினபுரியிலும் களு கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் காணப்பட்ட போதிலும், தற்போது அங்கு நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து (Falling) வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு – நாகலகம் வீதி பகுதியில் களனி கங்கையின் நீர்மட்டம் இன்னமும் எச்சரிக்கை மட்டத்திலேயே (Alert Level) நீடிக்கிறது.
எனினும், அங்கு நீர்மட்டம் தற்போது குறைந்து (Falling) வருகிறது. களனி கங்கையின் ஏனைய பகுதிகளான ஹன்வெல்ல, கிளன்கோர்ஸ், கிதுல்கல ஆகிய இடங்களில் நீர்மட்டம் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.
துனமலை பகுதியில் அத்தனகலு ஓயா இன்னமும் சிறிய அளவிலான வெள்ள மட்டத்திலேயே (Minor Flood) காணப்படுகிறது.
எவ்வாறாயினும், அங்கு நீர்மட்டம் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கிறது.
