இலங்கைக்கு குறுகிய கால விஜயங்களை மேற்கொள்ளும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று திங்கட்கிழமை (25) முதல் அமலுக்கு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, மலேசியா, சவுதி அரேபியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலருஸ், இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஸகஸ்தான் , குவைத், நோர்வே, ஓமான், பாகிஸ்தான், போலந்து, கட்டார், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய 40 நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த இலவச விசா சலுகை கிடைக்கப்பெறவுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாடுகளின் இராஜதந்திர , உத்தியோகபூர்வ , சேவை அல்லது சாதாரண கடவுச்சீட்டுகளைக் கொண்ட பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச விசா பெறத் தகுதி உடையவர்களாவர்.
இந்த 40 நாடுகளின் பிரஜைகளும், இலங்கையுடன் இருதரப்பு பரஸ்பர விசா ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள மாலைதீவு, சீஷெல்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உட்பட அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளும் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இணையவழி சுற்றுலா அனுமதி ஒன்றைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு, சீஷெல்ஸ், சிங்கப்பூர் மற்றும் விசா விலக்கு அளிக்கப்பட்ட மேலே உள்ள 40 நாடுகளின் பிரஜைகளுக்கான ETA அனுமதிப் பத்திரமானது கட்டணங்கள் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாகச் செயலாக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும் இலவச விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும் .
30 நாட்கள் செல்லுபடியாகும் காலப்பகுதிக்குள், இலங்கைக்கு முதன்முறையாக வருகை தந்த திகதியில் இருந்து இருமுறை பிரவேசிக்கும் வசதி இவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த இலவச விசாவைப் பெற்றுக்கொண்டு 30 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், அதற்குரிய விசா கட்டணத்தைச் செலுத்தி விசா காலத்தை நீடிப்பதற்குக் விண்ணப்பிக்கலாம்.இலங்கை செய்திகள்
மேலே குறிப்பிடப்பட்ட இலவச இணையவழி சுற்றுலா அனுமதி அனுமதிக்குத் தகுதியற்ற ஏனைய அனைத்து நாடுகளின் பிரஜைகளும், இலங்கை இணையவழி சுற்றுலா அனுமதி முறையின் கீழ் நடைமுறையிலுள்ள சாதாரண விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டே விசாக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
