அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவுகளை நாளை வெள்ளிக்கிழமை (29) பயனாளிகளின் வங்கித் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள சுமார் 07 இலட்சம் முதியவர்களுக்காக, அரசாங்கத்தினால் 349 கோடியே 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா நிதி இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.
கட்டங்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கான நிதி ஒதுக்கீடானது, முதலாம் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக 312 கோடியே 56 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதிய பயனாளிகளுக்காக 36 கோடியே 83 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பயனாளிகள் அனைவரும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
