யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயகுமாரின் உடலை எதிர்வரும் சனிக்கிழமை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திடமிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைய, மாநகர சபையிடம் உரிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை உடலை அடக்கம் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கடந்த 25 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை, மரண தண்டனை கைதியான பூபாலசிங்கம் ஜெயகுமார் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
பிரேத பரிசோதனையின் பின்னர், உறவினர்கள் உடலை ஏற்க மறுப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையிலேயே உடலை அரச செலவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களும் அடங்கியிருந்தனர்.
இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 07 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
