ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி, போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி வருவதாக வாஷிங்டன் இன்னும் நம்புகிறது.
கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவொன்றில், எதிர்காலத்தில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது ஈரானியர்களுடன் அவர் மேற்கொள்ளவிருக்கும் ஒரு முக்கிய உடன்படிக்கையின் முதற்கட்டமாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கடந்த வார இறுதியில் லெபனான் அதிபர் அவ்ன் (Aoun) மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஆகிய இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
போர் நிறுத்தத்தை எவ்வாறு படிப்படியாகக் கொண்டு வரலாம் என்பது குறித்து அவர்கள் ஆராய்ந்தனர்.
ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அதற்குப் பகரமாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக் கூடாது என்பதே அந்தத் திட்டமாகும்.
இருப்பினும், லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபீஹ் பெர்ரி (Nabih Berri) மூலமாகவே தற்போதைய பெரிய சிக்கல் எழுந்துள்ளதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் பெர்ரியின் பதில் “மழுப்பலாகவும் ஏமாற்றமளிப்பதாகவும்” இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், ஹிஸ்புல்லாவிடமிருந்து வரும் தாக்குதல்களை இஸ்ரேலால் தொடர்ந்து பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, பெய்ரூட் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த போதிலும், தற்போதைய ஒட்டுமொத்த சூழ்நிலைக்கும் ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் என்றும், இறுதியில் அந்த அமைப்பைக் கட்டுப்படுத்தும் ஈரானே இதற்குப் பொறுப்பு என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
