நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் வாகன விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், தேசிய வீதி கட்டமைப்புக்கு சொந்தமில்லாத வீதிகளை புனரமைக்க, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
இலங்கையில் பதிவாகின்ற வீதி விபத்துக்கள் காரணமாக இழக்கப்படுகின்ற உயிர்கள் மற்றும் சொத்துக்கள் அதிகரித்து வருவதுடன், இந்த விபத்துக்கள் தேசிய வீதி கட்டமைப்புக்கு சொந்தம் இல்லாத கிராமிய மற்றும் பிரதேச வீதிகளில் அதிகம் இடம்பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவ்வாறான ஆபத்தான நிலைமைகளை நீக்கி, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பிரதேச ரீதியிலான நிறுவன கட்டமைப்புகளில் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு இன்மையினால் இந்நிலைமை தொடர்ந்து நிலவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேசிய வீதி கட்டமைப்புக்கு சொந்தம் இல்லாத வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்றதும் ஆபத்தான இடங்களையும் பாதுகாப்பதற்கான புனரமைப்பு, வீதி சமநிலை பொருத்துதல், பாதுகாப்பு வேலிகளை அமைத்தல், வீதி குறியீடுகளை இடுதல், வேகத்தை கட்டுப்படுத்தும் தடைகளை இடுதல் போன்ற படிமுறைகளை மேற்கொள்வதற்காக, 2026 ஆம் ஆண்டின் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வீதி பாதுகாப்பு மற்றும் மோட்டார் வாகன முகாமைத்துவத்திற்கு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியில் குறித்த வீதிகள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
