யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தரமற்ற உப்பினை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி முகாமையாளர் மற்றும் உப்பு உற்பத்தி நிலைய முகாமையாளர் ஆகியோருக்கு ஒன்றரை வருட சிறை தண்டனையும் 18000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது தரமற்ற உப்பு விற்பனைக்கு வந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது
அதனை கைப்பற்றிய சுகாதார பரிசோதகர் நீதிமன்ற அனுமதி உடன் உப்பு மாதிரியை கடந்த பிப்ரவரி மாதம் அரசு ரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி அறிக்கை கோரியிருந்த நிலையில், உப்பு தரம் அற்றது என அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை அடுத்து பல்பொருள் அங்காடி முகாமையாளர் மற்றும் உப்பு உற்பத்தி நிலைய முகாமையாளர் ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக மூன்று குற்றச்சாட்டுகளில் பொது சுகாதார பரிசோதகர் யாழ்ப்பாணம் பொது சுகாதார பரிசோதகர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்றைய (02) தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இருவரும் தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர்
அதனை அடுத்து ஒவ்வொரு குற்றத்திற்கும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு 18000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஆறு மாத கால சிறை தண்டனை விதித்ததன் அடிப்படையில் ஒன்றரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று குற்றங்களுக்கான சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது
அதேபோல குறித்த நிறுவனத்தால் மற்றைய அங்காடிகளுக்கு வழங்கப்பட்ட உப்புகள் அனைத்தையும் மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.
