நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட காட்மோர் பிரதான பாதையானது போக்குவரத்துக்கு உதவாத நிலையில் காணப்படுகிறது . இதன் காரணமாக இந்த பகுதியில் வாழும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.
குறித்த பாதையில் நான்கு தனியார் பேருந்துகள், அரச பேருந்து, சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் போன்றவை தினமும் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேலான பெருந்தோட்ட மக்கள், பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறையினர் இந்த பாதையை நாளாந்தம் பயன்படுத்துவதோடு, காட்மோர் நீர் வீழ்ச்சியை பார்வையிடவரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குறித்த பாதையினை பயன்படுத்துகின்றனர்.
மத்திய மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் உள்ள இந்த பாதையை சீர் செய்யும் நோக்கில் கடந்த 2018 ஆண்டு ஜூலை மாதம், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு மல்லியப்பு சந்தியில் இருந்து காட் மோர் சந்தி வரை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால் குறித்த வேலைத்திட்டம் முழுமை பெறாத நிலையில், மொக்கா தோட்ட பிரதான காரியாலயம் வரை செப்பனிடப்பட்டு, இடைப்பட்ட சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் கைவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 2025 ஆண்டு ஜூலை மாதம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூலமாக இந்த பாதையை கார்பெட் பாதையாக செப்பனிடும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது .
குறித்த சாலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறிப்பிட்ட 2 கிலோ மீட்டர் தூரம் வரை செப்பனிட்ட போதும் எஞ்சிய பகுதிகள் இன்னும் பாரிய குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
இன்று வரை முழுமை பெறாத குறித்த சாலையின் அவல நிலை காரணமாக, பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் , கர்ப்பிணிகள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இந்தப்பாதையில் பயணிக்கின்றனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் தலையிட்டு இந்தப்பாதையை சீரமைத்து தருமாறு காட்மோர் பிரதேச மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
