பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் சேர்த்துக்கொள்வதற்காக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள சில நிபந்தனைகள், அரசாங்கப் பரீட்சைகளின் இரகசியத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக குறித்த சுற்றறிக்கையை உடனடியாக இடைநிறுத்தி, தேவையான திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் சி.பி. இலங்கசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் 7.5 ஆம் இலக்கத்தின் கீழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் மிகவும் பாரதூரமான விடயமாக, பல்கலைக்கழக ஆசிரியர்கள் அரசப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரித்தல் மற்றும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பான தகவல்களை பாடசாலைகளுக்கு கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த ஆசிரியர்கள் எந்தப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கின்றனர் என்பது பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் எங்களுக்குக் கூட தெரியாத ஒரு விடயமாகும். அந்தத் தகவல்கள் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தாங்கள் எந்தப் பரீட்சைக்கான வினாத்தாளைத் தயாரிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.
அவ்வாறான தகவல்கள் முன்கூட்டியே சிலருக்குத் தெரியவரும் நிலை ஏற்பட்டால், பரீட்சை வினாத்தாள்களின் இரகசியத்தன்மையே பாதிக்கப்படக்கூடும். இந்த நிலைமை தொடர்பில் எந்தவித கவனமும் செலுத்தாமல் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கை, பரீட்சைகளின் இரகசியத்தன்மையை வெளிப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை கட்டாயப்படுத்துகின்றது.
இந்த நடவடிக்கையின் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதை கட்டுப்படுத்தும் முயற்சியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாம் கருதுகின்றோம். இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளோம். குறித்த சுற்றறிக்கையை உடனடியாக இடைநிறுத்தி, தேவையான திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பல்கலைக்கழக ஆசிரியர் சமூகத்துடன் அரசாங்கம் நடந்து கொள்கின்ற விதம் குறித்து நாம் தீவிரமாக ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பொதுக் கல்விக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் வழங்கி வரும் சேவைகள் தொடர்பில் மீளாய்வு செய்து வருகின்றோம். அரசப் பரீட்சைகளுக்கான வினாத்தாள் தயாரித்தல், விடைத்தாள் மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பொதுக் கல்விக்காக வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தொடர்ந்தும் வழங்க வேண்டுமா என்பது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் வாரத்துக்குள் இது தொடர்பான முடிவொன்றை அறிவிக்க முடியும் என நம்புகின்றோம். ஜனாதிபதி இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்மானம் எடுக்கத் தவறினால், பொதுக் கல்விக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் வழங்கி வரும் சேவைகள் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
