பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை (3) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, குறித்த மீளாய்வு மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதியரசர்கள் அமர்வினால் இன்று புதன்கிழமை (3) திகதி குறிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டு, இருதரப்பு விவாதங்களும் விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக நிலுவையிலுள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்திருந்தது. மேல் நீதிமன்றம் வழங்கிய அந்த உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானது என்பதால், அதனைப் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு யோஷித ராஜபக்ஷ தனது மீளாய்வு மனுவின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இந்த மனு இன்று புதன்கிழமை (3) நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
