உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் முன்மொழிவைக் கைவிடுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்தலாம், நீதிச் சேவையின் உள்ளகப் பதவி உயர்வுகளைப் பாதிக்கலாம் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கலாம் என அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
ஜூன் 3ஆம் திகதியிட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள 9 பக்கங்களைக் கொண்ட விரிவான கடிதத்திலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது அரசியலமைப்பின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய அரணாகும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்பின்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வரம்புகள் நீதித்துறையின் தொடர்ச்சியைப் பேணவும், அதேநேரம் புதிய தகுதிவாய்ந்த நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களுக்குள் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யவும் திட்டமிட்டே வகுக்கப்பட்டவையாகும்.
தகுந்த அரசியலமைப்பு ரீதியான நியாயங்கள் இன்றி இந்த விதிகளில் மாற்றம் செய்ய முயல்வது, நீதித்துறையில் தன்னிச்சையாகத் தலையிடும் செயலாகவே பார்க்கப்படும் என கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பதவியிலுள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதானது, உயர் நீதிமன்றங்களுக்குத் தங்களை உயர்த்திக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் நீதிச் சேவையில் அடிமட்டத்திலிருந்து உழைத்து வரும் ஏனைய நீதித்துறை அதிகாரிகளைப் பாரியளவில் பாதிக்கும் என சங்கம் வாதிட்டுள்ளது.
தற்போது பதவியிலுள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதானது, உயர் நீதிமன்றங்களுக்குத் தங்களை உயர்த்திக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் நீதிச் சேவையில் அடிமட்டத்திலிருந்து உழைத்து வரும் ஏனைய நீதித்துறை அதிகாரிகளைப் பாரியளவில் பாதிக்கும் என சங்கம் வாதிட்டுள்ளது.
உயர் நீதிமன்றங்களில் ஏற்படும் வெற்றிடங்கள் பிற்போடப்படுவதனால், தகுதியான அதிகாரிகளின் பதவி உயர்வுகள் தடைப்பட்டு, அவர்களின் உத்வேகம் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகள் சிதைந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதானது, தங்களுக்குச் சாதகமான குறிப்பிட்ட சில நீதிபதிகளைப் பதவியில் நீடிக்கச் செய்ய நிறைவேற்று அதிகாரம் முயல்வதாகப் பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்ற போதிலும், நீதித்துறை சுதந்திரமாக இயங்குவது மட்டுமல்லாமல், அது சுதந்திரமாக இயங்குவது போல வெளியில் தெரிவதும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு அவசியமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதவிக்காலம் நீடிக்கப்பட்ட நீதிபதிகள், அரசாங்கம் சம்பந்தப்பட்ட வழக்குகளையோ அல்லது தங்களது பதவிக்கால நீடிப்புக்கு வழிவகுத்த சட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளையோ விசாரிக்கும் போது, அது நடுநிலைமைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேல் நீதிமன்றங்களில் இன்னும் நிரப்பப்படாமல் உள்ள வெற்றிடங்கள் காரணமாகவே நீதி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டு, வழக்குகள் தேங்கிப் போயுள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ள சங்கம், “தற்போதுள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதை விடுத்து, அரசியலமைப்புக்கு அமைய நிலுவையிலுள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதே இதற்கான சரியான தீர்வாகும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இந்த முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற்று, உயர் நீதிமன்ற வெற்றிடங்களை தாமதமின்றி நிரப்புமாறும், நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வசந்த பிட்டிகல மற்றும் செயலாளர் டெனி பெர்னாண்டோ ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள் சட்டமா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
