சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) காற்று கசிவு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், அங்கு பணியில் உள்ள விண்வெளி வீரர்கள் தங்களது விண்கலங்களில் தங்கியிருக்குமாறு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா (NASA) அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அவசர நிலைமை உருவானால் உடனடியாக நிலையத்தை விட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் பேச்சாளர் பெத்தனி ஸ்டீவன்ஸ் (Bethany Stevens), X சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பிரிவில் உள்ள ஸ்வெஸ்டா சேவை தொகுதி (Zvezda Service Module) சுரங்கப் பகுதியில் நீண்டகாலமாக விரிசல்கள் மற்றும் காற்று கசிவுகள் பதிவாகி வந்ததாக தெரிவித்துள்ளார்.
புதிய கசிவுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விரிவான பழுதுபார்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ரஷ்ய தொழில்நுட்பக் குழுவினர் கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விண்வெளி வீரர்கள் தங்களது விண்கலங்களில் தங்கியிருக்குமாறு நாசா உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடனும், சர்வதேச விண்வெளி நிலையத்தை ஆதரிக்கும் பிற சர்வதேச பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 7 விண்வெளி வீரர்களில் 5 பேருக்கு, பாதுகாப்பு நடவடிக்கையாக SpaceX Crew Dragon Freedom விண்கலத்தில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
