ஹொரணை அரச வங்கி கிளை ஒன்றில் மூன்றரை கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், மற்றையவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த வங்கியில் பணியாற்றி வந்த உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஹொரணை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, கைதான உதவி முகாமையாளரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு காவல்துறையினருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
அதேநேரம், வங்கியின் பாதுகாப்பு அதிகாரியை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர் ஒருவரினால் வங்கியின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக எடுத்து வரப்பட்ட 3.5 கோடி ரூபாய் பணத்தைக் கொண்ட இரண்டு பைகளை, இந்த சந்தேகநபர்கள் இருவரும் பலவந்தமாக கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
