நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் சுமார் 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்பட வாய்ப்புள்ளதாகவும், கடலில் பயணிக்கும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவித்தல் வெளியாகும் வரை குறித்த கடற்பிராந்தியங்களுக்குள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்ந்தும் வானிலை அறிவிப்புகளை அவதானித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
