மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை குவித்தது.
அந்த அணியின் சார்பில் பாத்திமா சனா 37 ஓட்டங்களையும், முனீபா அலி 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சேதனா விமுக்தி சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலடி கொடுத்த இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
தலைவி சமரி அத்தபத்து அதிரடியாக 94 ஓட்டங்களைப் பெற்றதுடன், விஷ்மி குணரத்ன ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களைப் பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
