எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களின் உயர்வு காரணமாக உள்நாட்டு வர்த்தகர்கள் தங்களது தொழில்களை கைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் கடுமையான சூழல் உருவாகியுள்ளதாக உள்நாட்டு தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அவ்வமைப்பின் செயலாளர் புஷ்பகுமார கருணாரத்ன தெரிவிக்கையில்,
எரிபொருள் நெருக்கடிக் காரணமாக சிறு அளவிலான உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை விநியோகிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
தங்களுக்கு சொந்தமான சிறிய வாகனங்கள் மூலம் சந்தைப்படுத்தலில் ஈடுபடுவதால் எரிபொருள் விலை உயர்வு நேரடியாகவும் கடுமையாகவும் பாதித்துள்ளது. அதனால் ஏற்படும் கூடுதல் செலவினங்களை நுகர்வோர் மீது சுமத்த அவர்கள் விரும்பாவிட்டாலும் வேறு வழியின்றி தவித்து வருகின்றனர்.
தற்போதைய அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறினாலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களையும் தொழிலாளர்களையும் பாதுகாத்தால் மட்டுமே நாட்டிற்கு வருமானத்தை பெற்றுத் தந்து நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியும் இந்த வளர்ச்சிப் பாதையை அரசாங்கம் முடக்கிவிடக் கூடாது.
மேலும் தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் எரிபொருள் விலை உயர்வு குறித்து பேசிய பல விடயங்கள் மக்களுக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் இன்று அரசாங்கம் அதனை மறந்து விட்டது.
அரசாங்கம் உடனடியாக வரிகளை குறைத்து மக்களுக்கு எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்க வேண்டும்.
வரிகளை நீக்கி உள்நாட்டு வர்த்தகர்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும். இல்லையெனில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான உள்நாட்டு வர்த்தகர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி தங்களது அறிவு மற்றும் திறன்களை வெளிநாடுகளுக்கு வழங்கி அங்கு அதிக வருமானம் ஈட்டத் தொடங்குவார்கள். இது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய சவாலாக மாற முடியும் என்றார்.
