இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்கு மாநில அரசு கொள்கை அளவில் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுபான தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்றம், பொதியிடல் செலவுகள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகப் போக்குவரத்துச் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்துமாறு மாநில அரசுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து வந்துள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு, ஒற்றை நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து அரசு ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தது.
தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மாநில அரசு, விலையை உயர்த்தச் சம்மதித்துள்ளது.
எந்தெந்த மதுபான வகைகளுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்பது குறித்த இறுதிப் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், சாதாரண மதுபான போத்தல்களுக்கு 80 ரூபாய் வரையிலும், ஏனைய ரகங்களுக்கு 90 ரூபாய் வரையிலும், உயர்தர மதுபான போத்தல்களுக்கு 120 ரூபாய்க்கு மேல் வரையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் மாநில மதுவரி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கடந்த பெப்ரவரி மாதம் விலை உயர்த்தப்பட்டதால் இம்முறை பியர் (Beer) விலைகளில் மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.
இந்த திடீர் விலை உயர்வு முடிவால் மாநில அரசின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், மதுப்பிரியர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
