சுரேஷ் சலேவின் வாழ்க்கை மிகவும் பெறுமதி வாய்ந்தது. நாட்டுக்கு உயிரையும் துணிச்சலையும் வழங்கிய ஒரு நபரை இவ்வாறான நிலைக்குத் தள்ளியது மிகுந்த கவலையளிக்கிறது. அதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் உண்மையை உணர்ந்து, அவர் தனது குற்றமற்ற தன்மையை நிரூபிப்பதற்கான சுதந்திரமான சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பெல்லன்வில ரஜமஹா விகாராதிபதி கலாநிதி தம்மரதன நாயக்க தேரர் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் விடுதலை மற்றும் அவர் தற்போது எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழலில் இருந்து மீள்வதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமையில், பெல்லன்வில ரஜமஹா விகாரையில் விசேட போதி பூசை மற்றும் பிரித் பாராயண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07) மிக விமரிசையாக நடைபெற்றது.
நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு அதிகாரியின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவிக்கும் வகையில், அரசியல் தலைவர்கள், மகா சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த வழிபாட்டு நிகழ்வை முன்னெடுத்தனர்.

இந்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் துணைவியார் மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு, அவரது விடுதலைக்காகத் தங்களின் பிரார்த்தனைகளை முன்வைத்தனர். நிகழ்வில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது பிரார்த்தனைகளுடன் கூடிய ஆதரவை வெளிப்படுத்தினர்.
