பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையே திங்கட்கிழமை (08) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மலையக மக்களின் வாழ்வியல், வரலாறு மற்றும் கலாசாரத்தை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தனது திட்டம் குறித்து பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான் தன்னிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டார். தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இத்திரைப்படத்தில் மலையக கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இயக்குனர் தங்கர்பச்சானின் இந்த ஆக்கபூர்வமான திட்டத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். மலையக மக்களின் வாழ்வியலைத் திரைப்படமாக்கும் இத்தகைய முயற்சி எமது சமூகத்துக்குப் பெருமை சேர்க்கும் செயலாகும். இத்திட்டத்துக்கு எனது அமைச்சின் ஊடாக வழங்கக்கூடிய அனைத்து விதமான உதவிகளையும், முழுமையான ஆதரவையும் நான் வழங்கத் தயாராக உள்ளேன்.
குறிப்பாக, எமது மலையகக் கலைஞர்களுக்கு இத்திரைப்படத்தில் வாய்ப்புகள் வழங்கப்படுவது அவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்த ஒரு பொன்னான சந்தர்ப்பமாகும்.
சமூகத்தின் வேர்களை ஆவணப்படுத்தும் இத்தகைய திரைப்படங்கள் காலத்தின் கட்டாயமாகும். இத்திட்டம் வெற்றிபெற எனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என குறிப்பிட்டார்.
