பஹ்ரைனில் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மாம்பழ விழாக்களில் இலங்கை மாம்பழங்கள் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டு, அங்குள்ள நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பஹ்ரைனின் லூலூ ஹைப்பர் மார்க்கெட் மற்றும் அல் ஜெஸீரா ஆகியவற்றில் இந்த விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பஹ்ரைனுக்கான இலங்கை தூதரகத்தின் பொருளாதார ரீதியிலான இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையிலிருந்து புதிய மாம்பழங்கள் மற்றும் ஏனைய பழ வகைகளை இறக்குமதி செய்யுமாறு பஹ்ரைனின் முன்னணி சில்லறை விற்பனையாளர்களுக்கு தொடர்ச்சியாக ஊக்குவிப்பு வழங்கப்பட்டு வந்தது.
இதற்கமைய, கடந்த மே மாதம் 23ஆம் திகதி லூலூ ஹைப்பர் மார்க்கெட் சங்கிலியினால் “மேங்கோ மேனியா” எனும் பெயரில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான மாம்பழங்களை உள்ளடக்கிய விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் இலங்கை மாம்பழங்கள் விசேட இடத்தைப் பிடித்திருந்தன.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் திகதி “தி கிரேட் மேங்கோ ஃபுட்பால் ஃபீஸ்டா” (The Great Mango Football Fiesta) ஆரம்ப நிகழ்விலும் இலங்கை மாம்பழங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன.
இந்த விழாக்களில் இலங்கை மட்டுமன்றி இந்தியா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் மாம்பழங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அல் ஜெஸீரா விழாவின் சிறப்பம்சமாக, இலங்கை மாம்பழங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இலங்கை பாரம்பரிய உணவுகள் குறித்த நேரடி சமையல் விளக்கக்காட்சி ஒன்றும் இடம்பெற்றது.
இவற்றுடன் இணைந்து, இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளான ‘சிலோன் தேயிலை’ வகைகளின் காட்சிக்கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தமை இலங்கையின் உற்பத்திகளுக்கு சர்வதேச ரீதியில் சிறந்த விளம்பரமாக அமைந்திருந்ததாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.