குவைத் உள்துறை அமைச்சு, வீட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு, இலங்கை உள்ளிட்ட 10 அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மட்டுமே பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை, 27 நாடுகளிலிருந்து ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் பொதுமனிதவள ஆணையம் உள்ளிட்ட பல அரச அமைப்புகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தென்னாப்பிரிக்கா, பெனின், எரித்திரியா, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, இந்தியா, வியட்நாம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வீட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், செனகல் நாட்டிலிருந்து ஆண் பணியாளர்களை மட்டும் நியமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடகாஸ்கர், பூடான், கென்யா, உகண்டா, நைஜீரியா உள்ளிட்ட 27 நாடுகளிலிருந்து வீட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு பணியாளர் துறையை ஒழுங்குபடுத்தவும், கண்காணிப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தவும் இந்த புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
