எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு அடுத்த மாதம் முதல் இலங்கையின் வானிலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவு பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூறுகையில், இந்த நிகழ்வு தென்மேற்கு பருவமழை மீதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்கனவே எல் நினோ நிலைமைகள் உருவாகியுள்ளதுடன், அதன் விளைவுகள் சுமார் 11 மாதங்கள் வரை பல்வேறு அளவுகளில் நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எல் நினோ காரணமாக இலங்கையின் காலநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில், நீர்ப்பாசனம், மகாவலி அதிகாரசபை, அனர்த்த முகாமைத்துவம், விவசாயம், கமநல அபிவிருத்தி மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட 20 முக்கிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
