அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், நாட்டில் அடக்குமுறைக் கருவியாக பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
10.06.2026 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேஸ்குமார் சங்கீத்சன் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இதுபோன்ற சட்டத்தின் கீழ் அடிக்கடி விசாரணைக்கு அழைக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
