விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்கும் கறுவா அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சிறப்பு கலந்துரையாடல் நேற்று (10) விவசாய அமைச்சில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கறுவா அபிவிருத்தி திணைக்களம் தங்களது எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்கிய வழிகாட்டி வரைபடத்தை அமைச்சரிடம் சமர்ப்பித்தது.
தற்போது உலகளவில் இலங்கை கறுவாவிற்கு அதிகமான தேவை நிலவுவதாகவும், உலக சந்தையில் உண்மையான கறுவாவின் சுமார் 80 வீதத்தை இலங்கையே உற்பத்தி செய்கின்றது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும், கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கை ஆண்டுதோறும் சுமார் 260 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டி வருவதாகவும், எதிர்காலத்தில் இதனை 300 மில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்துவதே திணைக்களத்தின் இலக்காகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
திணைக்களத்தின் தகவலின்படி, தற்போது ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து சராசரியாக 250 கிலோகிராம் கறுவா உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனை 400 கிலோகிராம் வரை உயர்த்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் கறுவா தொழில்துறையில் நிலவும் பல முக்கிய சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அவற்றில், ‘கசியா’ எனப்படும் போலியான கறுவாவால் உருவாகும் சந்தைப் போட்டி, குறைந்த விலை சந்தைகளின் மீது அதிக நம்பிக்கை, சில ஏற்றுமதியாளர்களிடம் மட்டுமே மையமாகியுள்ள சந்தை ஏகபோகம், போதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளின் குறைபாடு, மேலும் பலவீனமான வர்த்தக முத்திரை போன்றவை குறிப்பிடப்பட்டன.
கறுவா பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக சந்தை விரிவாக்கம், புதிய சந்தைகளில் நுழைவு, மதிப்பு சேர்க்கப்பட்ட (Value-added) இலங்கை கறுவா தயாரிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் உள்நாட்டு பயிர்செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.
மேலும், தற்போது அமைக்கப்பட்டு வரும் “தேசிய கறுவா கைத்தொழில் மற்றும் கலாசார ஊக்குவிப்பு மையம்” தொடர்பாகவும் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதேபோல், கறுவாவை இடைப்பயிராக (Intercrop) பயிரிடும் சாத்தியக்கூறுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
